"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/30/2013

இஸ்லாத்தில்இல்லாத முஸ்லீம்கள்!



நம்மில் பலர், தங்களையும் அறியாமல் அல்லாஹ்வுக்கு இணை யாக மனிதர்களில் சிலரைக் கருதிக்கொண்டிருப்பதும்,
அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் எல்லாமே மனிதர்களில்சிலருக்கு இருப்பதாக நம்பி, அதன் வழியிலே தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும். அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது.ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையிலே,
"நிச்சயமாக அல்லாஹ்தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;.இது அல்லாத(மற்ற பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்.
எவன் ஒருவன்அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ,
அவன் நிச்சயமாக வெகு தூரமானவழிகேட்டில் ஆகிவிட்டான்." (அல்குர்ஆன் 4:116)
என்று கூறுகிறான் ஆனால் இன்றைக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும் போது, தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது, முன்னோர் கொண்டு வந்ததுதான் மார்க்கம் என்று கண்களை இறுக மூடிக் கொண்டு, செல்லுமிடம் பற்றி கவலைக் கொள்ளாமல் தவறான பாதையில்தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "நான் உங்களை தெள்ளத் தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார்." (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா; ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)

சில நாட்களுக்கு முன் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு சம்பவத்தைப் பார்த்து, 'இவர்களுக்கு எந்தளவுக்கு மார்க்கம் எடுத்துச் சொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்! இம்மையில் கஷ்டப்பட்ட இவர்கள் தங்களின் மறுமை வாழ்வையும் தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்களே! இவர்கள் தெளிவான மார்க்கத்தை தூய்மையான முறையில் புரிந்துக் கொள்ள முயலாதது அவர்களின் குற்றமாக இருந்தாலும், இவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்தவர்களும் இப்போது அல்லாஹ்வுக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டார்களே!' என்றெல்லாம் நாம் கைசேதப்படாமல் இருக்க முடியவில்லை. இதோ பத்திரிக்கையில் வந்த அந்த செய்தி:

"ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புகழ் பெற்ற தர்கா உள்ளது. உத்தரபிரதேசம் அலகாபாத்தை  சேர்ந்த  ஒரு  குடும்பத்தினர் 1 1/2 ஆண்டாக அஜ்மீரில் வசித்து வந்தனர். அவர்கள் குடும்பத்தில் சில கஷ்டங்கள்   ஏற்பட்டன.  இதற்கு தீய சக்திகளின் பாதிப்புதான் காரணம் என்று கருதினார்கள். இது சம்பந்தமாக அவர்கள் ஒருவரிடம்  குறி கேட்டுள்ளனர். அதற்கு அவர் 40 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் இருந்தால் தீய சக்தி விலகிவிடும் என்று கூறினார்.
இதை நம்பி அந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். 39 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயிர் இழந்தனர். 25 வயது, 22 வயது கொண்ட 2வாலிபர்களும், 16 வயது கொண்டஇளம் பெண்ணும் இறந்தனர்.மற்ற 9 பேரும் உயிருக்கு போராடியபடி இருந்தனர்.இதை அறிந்த தர்கா நிர்வாகத்தினர் 9 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்." 

அறிவுப் பூர்வமான இஸ்லாமிய மார்க்கத்தில் நல்லவையும் தீயவையும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. இரண்டையும் பிரித்தறியக்கூடிய தெளிவான வழிகாட்டுதல்களான
குர்ஆனும் ஹதீஸும் நம்மிடம் இருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, இறைவன் அல்லாதவர்களுக்கு வணக்க வழிபாடுகளில் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற்பட்டு இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளை நம்பி, இஸ்லாத்தையே களங்கப்படுத்துவது வேதனையிலும்
வேதனை!  நாம் பின்பற்றி வாழக்கூடிய  கொள்கைக் கோட்பாடுகளும், அன்றாடம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளும், நம்முடைய அனைத்து சிந்தனை மற்றும்
செயல்பாடுகளும்  சரியானவை  தானா  என்பதை  திருக்குர்ஆனின்
அடிப்படையிலும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின் அடிப்படையிலும் ஒவ்வொருவரும் மறு பரிசீலனை செய்துப் பார்த்தால், எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயம் புரிந்துக் கொள்ளமுடியும்.தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கிவிட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்து, அதன்படி தம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொண்டவர்கள்,
அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவங்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முடியும். ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப்படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே எவை வழக்கத்தில் உள்ளதோ அதில்தான் அதிக கவனமும்
எச்சரிக்கையும் நமக்கு தேவைப்படுகிறது. நல்ல பொருட்கள் என்று நம்பி நாம் புழங்கக் கூடியவற்றில்தான் போலிகள் கலக்கப்பட்டு விற்பனைக்கு வரும். அதுபோலவே இறை வணக்கங்களில் ஈடுபாடு உடையவர்களை வழி கெடுப்பதில்தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. இதுதான் சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய நேரான பாதை என்று நரகத்தின் வழியை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவான்.
ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும்  அதிக அக்கறைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச்  சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும். அதுபோல  யாரெல்லாம் இறைவழிபாட்டை நேசிக்கிறார்களோ அவர்களைதான் தன் பக்கம் திசை திருப்புவதை ஷைத்தான் விரும்புவான். ஆனால், குர்ஆனையும் ஹதீஸையும் உறுதியான ஈமானோடு கடைப்பிடிப்பவர்கள் அவனுடைய இந்த  சூழ்ச்சிகளுக்கெல்லாம்
(இன்ஷா அல்லாஹ்) அடிபணியமாட்டார்கள். அதேசமயம் இதற்கெல்லாம் ஆளாகக்கூடியவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் கண்திறந்து பார்க்காதவர்கள்தான்! காது கொடுத்து கேட்காதவர்கள்தான்!  இறைவனும், இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எவற்றையெல்லாம் நன்மை என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை மட்டுமே நன்மைகளாகும். அவற்றைத் தவிர மற்றவர்களால் தம் சுய விருப்பத்திற்கு இவை நல்லவை என்று பட்டியலிடப்பட்டவை எதுவும் நல்ல வணக்கங்களாக ஆகாது.
சொல்லக்கூடியவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரிதான்!
ஆகவே எனதன்பு சகோதர, சகோதரிகளே! இதை உணர்ந்து, இறையோனுக்கு இணைவைத்தல் என்ற மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெற்றவர்களாக, இறுதி மூச்சுவரை ஏகஇறைவனை மட்டுமே வணங்கக் கூடியவர்களாக வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் வாழவைப்பானாக!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்